இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எல்லைகளில் பரஸ்பரம் தமது நாட்டு இராணுவத்தை குவித்து வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையில் 26 ஆவது நாளாகவும் முரண்பாடுகள் நீடிக்கும் நிலையில், இரண்டு நாட்டு இராணுவங்களும் நவீன ஆயுத தளவாடங்களை எல்லைகளில் குவித்து வருகின்றன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி சிக்கிம் எல்லையில் ஆரம்பித்த சிறிய மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சிக்கிம் எல்லையில் இரண்டு நாட்டு படைகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தற்போது இரண்டு நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லையில் ஓடும் நதியின் கரைகளை குறிவத்து இரண்டு நாடுகளும் தமது படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இது தொடர்பான செய்மதி நிழற்படங்கள் வெளியாகியுள்ளமை, இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்படுமோ என்ற அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பதற்றம் நீடிக்கும் லாடாக் எல்லைக்கு காஷ்மீரில் இருந்து மேலதிக படைகளை அனுப்பியுள்ளதாக இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாடுகளும் அறிவித்துள்ளன.
இதனிடையே கொரோனா தொற்று விவகாரம், வர்த்தக போட்டி, பொருளாதார மோதல் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்காவுடன் சீனா தொடர்ச்சியாக முரண்பட்டு வருகின்றது.
அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான இந்த மோதலில் தலையிடாமல் விலகியிருக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு சீனா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் புதிய பனிப்போர் அல்லது பாரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேரிடும் எனவும் சீனா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment