மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை மாரிகால பருவ மழை வீழ்ச்சி போதியளவு இல்லாத காரணத்தால் பயிர்ச்செய்கை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையை நம்பியுள்ள நெற்செய்கையும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் கருகிப் போகக் கூடிய நிலைமை இருப்பதாக மட்டக்களப்பு மானாவாரி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கட்டுமுறிவுக்குளம் விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் இது தொடர்பில் இன்று தெரிவித்துள்ளதாவது,
“இம்முறை மாரிகால பருவமழை வீழ்ச்சி போதியளவில் கிடைக்கவில்லை. இதனால் பாசன வசதியின்றி வான் மழையை மாத்திரம் நம்பி எதிர்பார்த்து பயிரிடப்பட்ட பல நூற்றுக் கணக்கான ஏக்கர் மானாவாரி நெற் செய்கையும், ஏனைய மேட்டு நில சேனைப் பயிர்ச் செய்கைகளும் கருகிப் போகும் நிலையை எதிர்கொண்டுள்ளன.
அடுத்து வரும் ஓரிரு தினங்களில் மழை பெய்யாவிட்டால் நெற் கதிர்கள் வெளிவந்த நிலையில் உள்ள பயிர்கள் வாடி மடிந்துவிடும் சாத்தியம் உள்ளது.
இவ்வாறு இடம்பெறுமாயின் ஏழை நெற்செய்கை விவசாயிகளுக்கும் சிறு பயிர்ச் செய்கையாளர்களுக்கும், சேனைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.கடந்த சுமார் இரு வாரங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, குளங்களின் நீரைப் பெறக் கூடியதாக உள்ள கீழ் நில பாசனப் பிரதேசங்களில் நெற்செய்கை சுமாரான வளர்ச்சியுடன் அறுவடைக்குத் தயாராவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறிருக்க, 90 நாட்களில் அறுவடை செய்யக் கூடிய நெல்லினங்களைப் பயிரிட்ட விவசாயிகள் ஏற்கெனவே அறுவடையைத் துவங்கி விட்டதாக மட்டக்களப்பு மத்திய விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment