இந்த உயர்மட்ட அரசியல் நகர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த முயற்சிகளில் நேரடியாக தொடர்புபட்ட அரசியல் பிரமுகர்கள் இது தொடர்பாக தகவல்களை தமிழ்பக்கத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகளை தீர்க்கும்படி சர்வதேச தலையீடுகள், மற்றும் உள்நாட்டு அழுத்தங்களின் தொடர்ச்சியாக, அரசியல் குழப்பத்தை சீர்செய்ய தயாராக இருப்பதாகவும், ஐ.தே.கவில் பொருத்தமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும்படியும் ஜனாதிபதி மிக அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கை அரசியல் குழப்பங்களை சீர்செய்ய முயற்சிக்கும் சர்வதேச பிரதிநிதி ஆகியோரிடம் தொலைபேசி வழியாக கேட்டுக் கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிந்து விட்டது, இனி அவர் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பில்லையென்றும் மைத்திரிபால இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் குழப்பங்களை தீர்க்க சில சர்வதேச பிரதிநிதிகளும் தீவிர முயற்சியில் இறங்கியிருந்தனர்.
இதையடுத்து நேற்றிரவு நடந்த உயர்மட்ட நேரடி கலந்துரையாடல்கள், தொலைபேசி உரையாடல்களின் பின்னர் தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதென ஐ.தே.முன்னணி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இதற்கான நல்லெண்ண சமிக்கைஞாக இன்று விஜேதாஷ ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் ஜனாதிபதி. விஜேதாஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது,
“ஜனநாயக கட்டமைப்புக்களின் பாதுகாப்பை நாடாளுமன்றம் உறுதிப்படுத்துகிறது.
நாம் 30 வருட காலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். முப்படை வீரர்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் ஏராளம் உயிரிழந்தனர். அப்படி ஒரு நிலைமை மீண்டும் வரக் கூடாதென்றே ஒரு ஜனநாயக புரட்சி நடந்தது. அதனால் தான் ஐதேக பொது வேட்பாளராக மைத்திரியை தெரிவு செய்தது. நாடு நன்றாக வர வேண்டும் என்பதே மக்களின் அவாவாக இருந்தது. நாட்டின் நன்மை கருதி 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம் . நிறைவேற்று அதிகாரத்தின் பல அதிகாரங்கள் நீக்கப்பட்டன. அது முழுமையானதல்ல .
நாங்கள் நல்லாட்சியை தேசிய அரசாக அமைத்தோம். பல பிரச்சினைகள் குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். ஆனால் ஒரு கட்டத்தில் இருதரப்புக்களும் சராசரி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டன. அந்த இருதரப்பையும் கட்டுப்படுத்த இரு தலைவர்களாலும் முடியாமற் போனது.
அப்படி ஒரு நிலைமையில் தான் திடீரென ஒக்டொபர் 26 இல் அரசியல் அதிரடி தீர்மானங்கள் வந்தன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அது இப்பொது நீதிமன்ற விசாரணையில் நிற்கின்றது.
அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவை அரசியலமைப்பு அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதையும் அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆணையை நிறைவேற்று அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கும் நிலைமை இப்போது உள்ளது.
அரசியல் பேதங்களை மறந்து நாம் நாடாளுமன்ற ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும். பாநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியமைக்க அதிகாரம் வழங்க வேண்டும். நாட்டின் நன்மை கருதி அது நடக்க வேண்டும். ஒரு கொள்கை உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். நாடாளுமன்ற வேலைகளை ஒரு பக்கம் வைத்து ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைக்கு முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும். ஜனாதிபதி இதில் விருப்புடன் இருப்பதை என்னால் அறிய முடிந்தது” என்றார் விஜேதாச ராஜபக்ச.
இதன்பின்னர், ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் ஜனாதிபதியின் சமரசத்திற்கான விசேட செய்தியை தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.
இதையடுத்து, புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய முன்னணி துரிதப்படுத்தியுள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் சத்தியக்கடதாசி ஜனாதிபதியிடம் வழங்கப்படுகிறது.
இதே சமயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சற்று நேரத்தில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளது. இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லையென்பது இரண்டு வாக்கெடுப்புக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க எமது ஆதரவை அளிக்கிறோம் என குறிப்பிடப்படவிருப்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. ரணில் அல்லது வேறு வேட்பாளர் என எந்த விபரமும் அதில் இல்லை.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியும் சிறிய விட்டுக்கொடுப்பிற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ரணில் அல்லது இன்னொரு பிரதமர் என்ற முடிவிற்கு வரலாமென கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் இறுதியான முடிவில்லை.
அவசரமான ஆட்சிமாற்றம் நடக்க வாய்ப்பேற்பட்டுள்ளதால், இன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று நடக்கவுள்ளது. ஆட்சிபீடமேறினால், ரணில் அல்லது ஐதேக என்னென்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு அதில் குறிப்பிடுமென தெரிகிறது.
No comments:
Post a Comment