முல்லைத்தீவு, கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையிலான களப்புப் பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு குற்றம் சுமத்துகின்றார், சென்.அன்ரனிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,கொக்குளாயிலிருந்து கொக்குத்தொடுவாய் வரையி லான 9 கிலோ மீற்றர் களப்பை நம்பியே முல்லைத் தீவு மாவட்டத்தின் கொக்குளாய், புளியமுனை, கொக்குத்தொடுவாய், கருநாட்டக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 450 குடும்பங்கள் வாழ்கின்றன. களப்புப் பிரதேசத்தில் இயந்திரப் படகோ ஒன்றே முக்கால் இஞ்சிக்கும் குறைவான வலைகளோ பாவிப்பது சட்டத்துக்கு முரணானது.
களப்புப் பகுதியில் தற்போது இறால், மீன் என்பன பெருக்கக்காலம். தற்போது எமது மீனவர்கள் சென்று வலைகளை விரித்து விட்டு வந்தால், புல்மோட்டை மீனவர்கள் நுழைந்து அறுத்துவிட்டு தமது கூட்டுவலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்தச் செயலால் எமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. கடல்வளமும் அழிவடைகின்றது -– என்றார்.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளை இது தொடர்பில் கேட்டபோது, நந்திக்கடலில் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட பலர் தப்பியோடியபோதும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 70 கூட்டு வலைகள் கைப்பற்றப்பட்டன -– என்றனர்.
No comments:
Post a Comment