விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தில் கண்டெடுக்கப்பட்ட மாவீரர் நடுகல்லொன்று பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
றணம் என்றழைக்கப்படும், குஞ்சுபண்டா றணசிங்கா என்ற மாவீரரின் கல்லறை அது.
சிங்கள பெயரை உடையதால், இந்த மாவீரரின் நடுகல் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்கள இளைஞர்களும் இணைந்திருந்தார்களா என்ற ஆச்சரியத்துடன் பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள்.
மேற்படி மாவீரன் முன்னம்போடி வெட்டை, மூதூர், திருகோணமலையை சேர்ந்தவர். அவர் தமிழ் பேசும் சிங்களவராக இருந்திருக்கலாமென கருதப்படுகிறது. 04.10.1999 அன்று வீரச்சாவடைந்திருந்தார்.
அதேசமயத்தில், சமூக ஊடகங்களில் ஆச்சரியம் வெளியிடப்படுவதை போல, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த, வீரச்சாவடைந்த ஒரேயொரு சிங்கள இனத்தை சேர்ந்தவர் அவரல்ல.
தமிழ் பகுதிகளில் வசித்த சிங்கள இனத்தவர்கள், பெயரளவில் சிங்களவரகளாக இருந்தார்களே தவிர, தமிழ் மொழி பேசுபவர்களாகவே வாழ்ந்தார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த இப்படியான பலர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார்கள். இறுதிவரையும் பலர் இருந்தனர். பலர் வீரச்சாவடைந்திருந்தனர்.
இதேபோல, பிறப்பால் முஸ்லிம் இனத்தவராக இருந்தாலும், தமிழ் பகுதிகளில் வாழ்ந்த பலர் விடுதலைப்புலிகளில் அமைப்பில் இணைந்திருந்தனர். பலர் வீரச்சாவடைந்திருந்தனர்.
2007ஆம் ஆண்டு கொழும்பில் டக்ளஸ் தேவானந்தாவின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த முயற்சியொன்றை இலங்கை புலனாய்வுத்துறை முறியடித்திருந்தது.
அந்த தாக்குதல் குழுவில் இருந்த போராளியொருவரை இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் கொழும்பில் வைத்து இராணுவ புலனாய்வுத்துறை கைது செய்தது. முஸ்லிம் போராளி அவர்.
வழக்கு விசாரணை, புனர்வாழ்வின் பின்னர் அண்மையில் அவர் விடுதலையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment