தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை அவதானித்தோம்.
உலகெலாம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க தயாராகிவரும் நிலையில்
கடற்கரையில் கச்சான் விற்கும் அந்த சிறுவனின் பேச்சு எம்மை சோகத்தில் ஆழ்த்தியது.
தனது தந்தை இயக்கத்திற்கு போய் இறந்து விட்டதாக கூறிய அந்த சிறுவன் அப்பா இறந்த பின் தனது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதாகவு அதன் பின்னர் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருவதாக கூறினான்.
தனது தாத்தாவான தவராசா சவுக்கடி கடற்கரையில் கூலிக்கு மீன்பிடித்து வருவதாகவும் அவர்களுக்கு மிகுந்த கஷ்டம் எனவும் தெரிவித்தான்.
தாத்தாவின் வறுமை நிலை காரணமாக பாடசாலை விட்டு வந்து சவுக்கடி கடற்கரையில் தினமும் கச்சான் விற்பதாக கூறிய அந்த சிறுவன் தனக்கு படிப்பதற்கு சரியான விருப்பம் எனவும் தெரிவித்தான்.
தான் பஸ்ஸில் பயணம் செய்தே பாடசாலைக்கு செல்வதாகவும் தன்னிடம் இருந்த சைக்கிள் உடைந்து விட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தான்.
அந்த சிறுவன் எங்களிடம் கூறிய வார்த்தைகள் சில எங்களின் மனசாட்சிகளை ஏன் உண்மையா உணர்வுள்ள தமிழர்களின் மனசாட்சிகளை நெருடிக்கொண்டே இருக்கிறது.
‘அப்பா இயக்கத்திற்கு போய் அடிபட்டுத்தார் அம்மா வேற கல்யாணம் கட்டித்து போயித்தாவு நான் மட்டும் தனியத்தான் இருக்கிறன் தாத்தாதான் என்னை பார்க்கிறார்.’
‘அம்மா நான் இருக்கிறதை சொல்லாம கலியாணம் கட்டினதால என்னை அம்மா சேர்க்கிறதில்லை சேர்க்க மாட்டன் என்று தாத்தாட்டை சொல்லித்தாவு நான் தனிய தாத்தாவுடன் இருக்கன் எங்கட அப்பா தயா என்று சொல்லுவாங்க அவர் இயக்கத்திற்கு போய் காட்டிக் கொடுக்காம செத்து போயித்தாரு ஊருள எல்லாரும் சொல்லுராங்க அப்பா நல்லவர் என்று ஆனா நான் அவரை பார்க்கள நான் இப்ப அப்பாவு இல்லாம அம்மாவும் இல்லாம தாத்தாவுடன் இருக்கன் பள்ளிக்கூடம் போறதற்கு தான் கச்சான் விற்கிறன்’ என்றான்.
இது போன்ற ஆயிரம் அவலங்களை இன்றும் சுமந்து தவிக்கிறது தமிழர் தேசம்.
பிரதி
Maichal S C Malisanthy
No comments:
Post a Comment