ஈழத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்த மாவீரர் பணிக்குழுக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உற்பட அரசியல் அமைப்புக்களால் சிவில் சமூகத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் பணி மாவீரர் நாள் நிகழ்வுகளை மக்கள் பங்களிப்போடு ஒழுங்கமைத்து மேற்கொள்வது. இந்த பணிக்குழுக்களை தவிர வேறு அமைப்புக்களோ, குழுக்களோ, கட்சிகளோ, மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ளவில்லை.
புலம்பெயர் தேசத்தில் ஈழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்ய, மாவீரர் நாள் செய்ய, நினைவுத்தூபி அமைக்க, சுற்றுமதில் கட்ட, மாவீரர் பெற்றோர் கெளரவிக்க என சில அல்லக்கை அமைப்புக்கள் நிதி கேகரிக்க தொடங்கி இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் சேகரிக்கும் நிதி ஈழத்திற்கு வந்து சேர்வதில்லை, மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்த புலம்பெயர் தேசத்தில் இருந்து பணம் வரவேண்டிய அவசியமும் இல்லை. அவ்வாறு மாவீரர் தினத்திற்கென குறிப்பிட்டு நிதி சேகரிப்பட்டு அப்பணம் இலங்கைக்கு வருமாக இருந்தால் அதை காராணமாகக்காட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்யும் அதற்காகத்தான் சிலர் இப்போது திரைமறைவில் வேலை செய்கின்றனர். இலங்கையில் புலிகளின் மீள் எழுச்சிக்கு மாவீரர் நாள் நிகழ்வு வழிவகுக்கும் என்றும் அதனால் அந்நிகழ்வினை தடைசெய்யவேண்டும் என்றும் அதை அனுமதிக்க முடியாதென்றும் இராணுவத்தளபதி அறிவித்திருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்த முனைகின்றதா சில சில்லறைகள்?
மாவீரர் பணிக்குழுக்களுக்கு பணம் அனுப்புவதோ குறிப்பிட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கென பணம் சேகரிப்பதோ மீண்டும் புலிகளை கட்டமைக்க மாவீரர் நாள் நிகழ்வு பயன்படுகிறதென்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஈழத்தில் முற்றாக அந்நிகழ்வு தடைசெய்யப்பட காரணமாகிவிடும் எனவே நீங்கள் பணம் சேர்ப்பதற்கு வேறுகாரணங்கள் எதையும் சொல்லுங்கள் இதை விட்டுவிடுங்கள்.
மாவீரர் நாள் நிகழ்வென்பது இன்னும் இலங்கையில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை மாவீரர் துயிலுமில்லங்களை இடித்தழித்த கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினை தமிழ் மக்கள் வாக்களித்து அகற்றியதன் பின்னர் கிடைத்த ஜனநாயக இடைவெளியினை பயன்படுத்தி தன்னெழுச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்களும் இணைந்து கடந்த இரு வருடங்களாக மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. இது மகிந்த ஆட்சி நிலைபெற்றால் தடைபடும் அபாயமும் இருக்கிறது.
இராணுவத்தின் வசமிருந்ததும் தனியாரின் அபகரிப்புகளுக்கு ஆட்பட்டிருந்ததுமான பல மாவீரர் துயிலுமில்லங்கள் தற்போது பிரதேச சபைகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டு சட்டரீதியாக அவை பொது இடமாக மயானமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு மீண்டும் வேறுகாரணங்களுக்காய் ஆக்கிரமிக்கப்படுவதில் இருந்தும் தடுக்கப்பட்டிருக்கிறது. சில துயிலுமில்லங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன அவற்றை மீட்க முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டுமிருக்கின்றன.
நிலைமை இவ்வாறிருக்க புலம்பெயர் தேசத்தில் சிலர் புலிகளின் பெயரில் அமைப்பு நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு புதிதாக முளைத்திருக்கும் சிலர் ஈழத்தில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிகளின் கட்சியென்ற பெயர்தாங்கிய ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து மாவீரர் நாள் செய்யப்போகிறோம் துயிலுமில்லத்திற்கு மதில் கட்டப்போகிறோம் மாவீரர் குடும்பத்திற்கு உதவிசெய்யப்போகிறோம் என நிதி வசூல் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் மாவீரர் பெயரில் சேகரிக்கும் நிதியினை தமக்குள் பங்கிட்டுக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கின்றனர்.
இந்த இடத்தில் அனைவரும் ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள் தனியார் எவரும் அமைப்புக்கள் எவையும் துயிலுமில்லங்களில் எந்தவொரு கட்டுமானத்தினையோ வேறுவகையான எதையுமோ செய்துவிட முடியாது. ஏனெனில் அவை பொதுக்காணிகள் என்ற ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ளன அதற்குள் தன்னிச்சையாக எவரும் எதையும் செய்யமுடியாது. எனவே துயிலுமில்லத்தின் பெயரில் பணம் சேர்க்கும் குழுக்களிடம் அவதானமாக இருங்கள்.
புலம்பெயர் தேசத்தைப்போன்று ஈழத்தில் மாவீரர் நாள் அனுஸ்ட்டிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் தேவைப்படுவதில்லை. மக்களே சிரமதானம் மூலம் துயிலுமில்லங்களை துப்பரவு செய்துகொள்கின்றனர் மக்கள் தாமாக தன்னெழுச்சியா இணைந்து தம் உறவுகளை அஞ்சலிக்கின்றனர். இது அவ்வாறே தொடர வேண்டும் இதற்குள் புலம்பெயர் பிழைப்புவாதிகள் தலையிட்டு எல்லாவற்றையும் குழப்பி நிம்மதியாக அம்மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதை கெடுக்க வேண்டாம்....
No comments:
Post a Comment