சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் தஞ்சக்கோரிகளை சிறிலங்காவிற்கு பலவந்தமாக நாடு கடத்துவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என சித்திவரதைகளுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் உலகின் முன்னணி அமைப்பு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை அடுத்து இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும் கொடூரமான சித்திரவதைகள் மீண்டும் தீவிரமடையலாம் என்று இலண்டனைத் தலைமையகமாகக் கொண்ட சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்ற அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை கருத்திற்கொண்டே நாடுகடத்தலை நிறுத்த வேண்டும் என்று பிரித்தானிய உட்துறை அமைச்சரிடம் முன்னர் எப்போதும் இல்லாத அளவிலான கோரிக்கையும் அந்த அமைப்பு விடுத்திருக்கின்றது.
பிரித்தானியாவின் பல இடங்களில் சித்திரவதைகளுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் முகாம்களை நடத்திவரும் சித்திரவதைகளில் இருந்து விடுதலை அமைப்பு, அவர்களில் பெரும்பானவர்களின் வாக்குமூலங்களுக்கு அமைய சிறிலங்காவிலேயே மிகக்கொடூரமாக சித்திரவதைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
“மஹிந்த ராஜபக்ச மீண்டும் சிறிலங்காவின் ஆட்சிக்கு வருவதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் நாம் அதிக கரிசணை கொண்டிருக்கின்றோம். ஏனெனில் பிரித்தானியா முழுவதும் காணப்படும் சிகிச்சை வழங்கும் முகாம்கள் பலவற்றிலும் எம்மால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை கருத்தில்கொள்ளும் போது மஹிந்தவைப் போன்று சித்திரவதைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒருவர் உலகிலேயே இல்லை என்றே கூற வேண்டும்.
மஹிந்தவின் மீள் வருகை சிறிலங்காவிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எவ்வாறான பாதகத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் நாம் அதிக கரிசணை கொண்டுள்ளோம். ஆனாலும் சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்கள் தொடர்பிலேயே எமது விசேட கவனம் திரும்பியிருக்கின்றது.
பிரித்தானியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் சித்திரவதைகளுக்க ஆளான 80 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பிலான ஆதாரங்களுடனான தரவுகள் எம்மிடம் இருக்கின்றன. இவர்களில் சிலர் விருப்பத்துடன் சிறிலங்காவிற்கு திரும்பிச் சென்றவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கீழ்மட்டத்திலான தொடர்பைப் பேணிய சந்தேகத்திற்காகவே அவர்கள் சித்திரவதைகக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அதனால் நாம் என்றுமில்லாத அளவிற்கு சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தீர்க்கப்பட்டு பிரித்தானியாவினால் நாடு கடத்தப்படும் எவரும், ராஜபக்சவின் படுகொலைகளுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற உத்தரவாதம் கிடைக்கும் வரை தஞ்சக்கோரிக்கை நாடுகடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்து திரும்பியிருந்த பிரித்தானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட், சிறிலங்காவில் வேகமாக இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.
ஜனநாயக ரீதியில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது தீர்மானத்தை சுதந்திரமாக எடுப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிடமும் பிரித்தானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment